சென்னை :அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா கடிதத்தை ஏற்று கொள்ளப்பட்டதாக ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைசட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 13ம் தேதி கைது செய்தனர். பின்னர், மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு, அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்தனர்.தற்போது, புழல் சிறையில் அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக அறிவித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி பிறப்பித்த உத்தரவை, சில மணி நேரங்களில் அவரே நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 19வது முறையாக நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் 8 மாதங்களாக இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்த நிலையில் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கடிதம் அனுப்பினார். அவருடைய கடிதத்தை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு பரிந்துரை கடிதம் ஒன்றை அனுப்பினார். இந்த நிலையில், முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை ஏற்பதாக ஆளுநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சருக்கு செந்தில் பாலாஜி கடிதம்
அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாகக் கூறி முதலமைச்சருக்கு செந்தில் பாலாஜி நேற்று கடிதம் அனுப்பியிருந்தார். அதில், “தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுகிறேன். தங்களது தலைமையின் கீழ் மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பு தந்ததற்கு நன்றி. நீதிக்காக போராட தனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்த முதலமைச்ருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் நிரபராதி உண்மையை வெளிக் கொண்டு வர சட்டரீதியாக தொடர்ந்து போராடுவேன். நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. விரைவில் நீதி வெல்லும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
The post முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் பதவியில் இருந்து விலகிய செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை ஏற்பதாக ஆளுநர் அறிவிப்பு!! appeared first on Dinakaran.